எகிப்தில் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்ட் சயித் நகரில் கால்பந்து போட்டி நடந்தது. இதில் அல்-மாஸ்ரி மற்றும் அல்-ஆலி அணிகள் மோதின. போட்டியை காண இரு அணிகளைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மைதானத்தில் திரண்டு இருந்தனர். அப்போது இரு அணிகளைச் சேர்ந்த ரசிகர்கள் மோதிக் கொண்டனர்.
இதில் கால்பந்து ரசிகர்கள் 74 பேர் பலியானார்கள். 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவர வழக்கில் அல்-மாஸ்ரி அணியின் ஆதரவாளர்கள் 21 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஜனவரி 26-ந்தேதி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைக் கண்டித்து எகிப்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் 40 பேர் இறந்தனர்.
இந்த நிலையில் 21 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கெய்ரோ நீதிமன்றம் நேற்று உறுதி செய்து இறுதி தீர்ப்பு வழங்கியது. மேலும் 9 போலீசார் உள்பட 52 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. கலவரம் நடைபெற்றபோது அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
தற்போது 21 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கெய்ரோ உள்பட எகிப்தின் பல பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி தகவல் வெளியாகவில்லை.
