அக்குறணை அஸ்ஹர் கல்லூரியின் முன்னாள் கிரிகெட் வீரர் டில்ஷாட் நிஹார் இலங்கை வேகபந்து வீச்சாளர் கழகத்திற்குத் (Sri Lanka Fast Bowlers Academy) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இப்பிராந்தியத்திலிருந்து ஒருவர் இக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுகின்றமை இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இவர் இலங்கை அணியில் எதிர்காலத்தில் விளையாடு வதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கின்றது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான டில்ஷாட் மணிக்கு சுமார் 132 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸிற்குப் பிறகு, நிரந்தமான இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் எவரும் அணியில் இடம்பெறாத நிலையில், இவ்விடைவெளியை டில்ஷாட் பூரணப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அக்குறணை அஸ்ஹர் பழைய மாணவரான டில்ஷாட், அஸ்ஹரின் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட பாடசாலை அணியில் விளையாடியவர். பாடசாலைகளுக்கிடையிலான முதற்தரப் போட்டிகளில் விளையாடிய இவர், 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் மடவளை மதீனாவிற்கெதிரான ஒருநாள் போட்டியிலும் விளையாடினார்.
இவரது சிறந்த ஆட்டம் 2008 இல் கிறிஸ் சேர்ச் கல்லூரிக்கு எதிராக ஏழு விக்கட்டுக்களைக் கைப்பற்றியமையாகும். 2010 இல் இவரது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட்டில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கியிருந்ததோடு, சிகிச்சைக்காக இந்தியாவிற்கும் சென்று வந்தார்.
பின்னர், அந்தோனியார் கல்லூரியின் கிரிக்கட் பயிற்றுனர்களில் ஒருவராகக் கடமையாற்றும் முஸ்னி அவர்களின் உதவியுடன் சீதுவ - ரத்தொலுவ கிரிகெட் கழகத்தில் இணைந்து, கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினார். 2012 இல் இலங்கை சுங்கக் கழகத்திற்காக (Sri Lanka Customs) ஆறு மாதங்கள் விளையாடினார்.
அண்மையில் நடைபெற்ற இருபதுக்கு - இருபது உலகக் கிண்ண போட்டிகளின் போது இடம்பெற்ற பயிற்சிகளின் போது, டேவிட் வோனர், மைக் ஹஸி, சேன் வொட்சன், ஜெக் கலிஸ், ஹாசிம் அம்லா போன்ற சர்வதேச கிரிகெட் வீரர்கள் பலருக்குப் பந்து வீசும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
இறுதியாக, இலங்கையின் தேசிய அணிக்குப் பந்து வீசும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. இதன் போதே இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் மாவன் அதபத்து, டில்ஷாடின் திறமைகளை அவதானித்து, அவரைப் பற்றி இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளரான சம்பக ராமநாயகவிடம் அவர்களிடம் சிபாரிசு செய்துள்ளார். இதன் பிறகே இவர் (Sri Lanka Fast Bowlers Academy) ற்குத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பயிற்றுவிப்பாளர் முஸ்னியும், அக்குறணையைச் சேர்ந்த சிலரும் தனக்கு உதவி புரிந்து வருவதாக நன்றியுடன் நினைவு கூறுகின்றார் டில்ஷாட்.
பாடசாலைக் காலங்களில் சிறப்பாகப் பிரகாசிக்கும் வீரர்கள் பலர் இப்பிராந்தில் இருந்தாலும், அவர்கள் தொடர்ந்தும் இத்துறையில் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமல் இருக்கும் ஒரு சூழலில், டில்ஷார்ட் எமது கிரிகெட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமானவர்.
அவ்வாறே, எமது கிரிகெட் வீரர்களுக்கு உரிய உதவிகளை தகுதியானவர்கள் வழங்கினால், அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கும் டில்ஷார்ட் ஒரு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றார்.
நன்றி : நியுஸ் வீவ்
