வெள்ளைப் புகை வந்தது - கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி


புதிய பாப்பரசராக பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். 

உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, வாடிகனின், சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தி வருகின்றனர். 

கார்டினல்கள் நேற்று, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கூடி, மீண்டும் வாக்களித்தனர். இரண்டாவது முறையும், தேவாலய புகைபோக்கியில் கரும்புகை வெளியேறியது. புதிய போப் தெரிவு செய்யப்பட்டதற்கு அடையாளமாக வெண்புகை வெளியே வரும் என்ற எதிர்ப்பார்ப்பில் ஏராளமான கிறிஸ்துவர்கள் சிஸ்டைன் தேவாலயத்திற்கு அருகே காத்திருந்தனர். 

இத்தாலி நாட்டு கார்டினல் ஏஞ்சலோ ஸ்கோலா, பிரேசில் நாட்டின ஓடிலோ ஸ்கெரர், கனடா நாட்டின் மார்க் அவுலெட் ஆகியோர் புதிய பாப்பரசருக்கான பரிந்துரையில் உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், ‌புகைக்கூண்டிலிருந்து புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடையாளமாக வெண்புகை வெளியேறியது. இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டவர் குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது. 

இதன்படி, அர்‌ஜென்டினாவின் பியூனர்ஸ் அயர்ஸ் நகர ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது வயது 76. லத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் முறையாக போப் ஆண்டவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பாப்பரசர் இனி, போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். 

புதிய பாப்பரசராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அங்கு குழுமியிருந்த மக்களுக்கு ஆசி வழங்கி உரையாற்றிய போப் முதலாம் பிரான்சிஸ், உலக அமைதிக்காகவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்தனை செய்வதாகவும், உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவ வேண்டும் என கூறினார். 

Post a Comment

Previous Post Next Post