எனது மகனை கிரிக்கெட் வீரனாகுமாறு கட்டாயப்படுத்தமாட்டேன்: சச்சின்

நான் கிரிக்கெட் வீரனாக இருப்பதால் எனது மகனையும் அதே துறையில் வர வேண்டுமென கட்டாயப்படுத்த மாட்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது:


1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது எனக்கு பெரிய சந்தோஷத்தையும், இந்திய அணி மீதும் கிரிக்கெட் மீதும், அளவிட முடியாத ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.



இப்போது 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது எனது மகனுக்கு அதே போன்றதொரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக அவனும் கிரிக்கெட் வீரனாக வேண்டுமென வற்புறுத்த மாட்டேன். அவனுக்கு எந்த துறையில் ஆர்வமோ அதில் அவனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள அனுமதிப்பேன் என்றார்.



தொடர்ந்து உலகக் கோப்பை வெற்றிக்குப்பின் தனது வீட்டுக்குச் சென்ற போது நிகழ்ந்த நெகிழ்ச்சியான விஷயங்களையும் சச்சின் பகிர்ந்து கொண்டார். உலகக் கோப்பை வெற்றிக்குப்பின் முதல்முறையாக வீட்டுக்குச் சென்றபோது எனது தாயார் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என்னை வரவேற்றார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்ததை நான் கண்டேன். உலகக் கோப்பை வெற்றிக்குப்பின் ஹோட்டலுக்குத் திரும்பிய போது ரசிகர்கள் எங்களை வரவேற்றதை எப்போதும் மறக்க முடியாது. இதற்கு முன்னர் இதுபோன்ற உணர்ச்சி பெருக்கான, மகிழ்ச்சிகரமான வரவேற்பை நான் பெற்றதில்லை என்றார்.



முன்னதாக மும்பை இண்டியன்ஸ் அணி வீரர்களை மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் சந்தித்துப் பேசினார். சச்சின் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி, சேவாக் கேப்டனாக உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியை டில்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது

Post a Comment

Previous Post Next Post