அனைத்து காலநிலைகளுக்கும் முகம்கொடுக்கும், சாதரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடிய கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமா என்ற ஆய்வு இலங்கையில் நடைபெற்றது. இந்த ஆய்வில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக ஆய்வை மேற்கொண்ட சீன நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவிடம் தனது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையில கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சீனாவின் உதவியுடன் வவுனியா, மொனராகல, அம்பாறை, எம்பிலிட்டிய, கண்டி, நுவரெலிய போன்ற இடங்களில் இந்த மின்உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, வேலிகளுக்கும், கால்நடைத் தீவனமாகவும் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த கிளிறிசிடியா மரம் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படவுள்ளதால் கிராம மக்களுக்கு அதிக வருவாயை ஈட்டிக் கொடுக்கும் பயிராக அது மாற்றமடைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். கிளிறிசிடியா மரத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்தால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், அத்துடன் மிகக்குறைந்தளவிலான முதலீட்டில் அதிக பயனைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

