முஸ்லிம்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கும் வழிபாடுகளில் ஒன்றான ரமழான் மாதம் நோன்பு நோற்பதை அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கடைப்பிடிக்கக் கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிம்களின் மத நடவடிக்கைகளான நோன்பு நோற்றல், மசூதிகளுக்குச் செல்லுதல் போன்றவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமாறு சீன அரசு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களைக் கேட்டுக் கொள்ளும் வாசகங்கள் சீன அரசின் பல இணையங்களிலும் இடம் பெற்றுள்ளன.
சீனாவின் சிங்ஜியாங் மாகாணத்தில் சுமார் 9 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். உய்கூர் இனத்தைச் சார்ந்த இவர்கள், சீன அரசு தங்களுக்கு மதச்சுதந்திரத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் தரவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
சிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஜோங்லாங் நகரசபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ரமழான் காலத்தின் போது சமூக நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கொள்கைகளை நகரசபை அறிவித்துள்ளது. அதன்படி, கம்யூனிஸ்டு கட்சித் தொண்டர்கள், அரசு அதிகாரிகள் (ஓய்வு பெற்றவர்கள் உட்பட) மற்றும் மாணவர்கள் ரமழான் மத நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
உஷாத்துணை : அல் ஜஸீரா
Tags
உலகச் செய்திகள்
