பாகிஸ்தான் - லாகூரில் உள்ள பாதணி தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 25 பேர் உடல் கருகி இறந்தனர். இங்குள்ள ஜெனரேட்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. எளிதில் தீப்பற்றக் கூடிய ரசாயன பொருட்கள், தோல், பிளாஸ்டிக் போன்றவை இருந்ததால் கம்பெனி முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. விபத்து ஏற்பட்டபோது கம்பெனியில் குழந்தைகள், பெண்கள் என 40 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தீயில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். கம்பெனியின் முன்பக்கத்தில் நெருங்க முடியாத அளவு தீ பற்றி எரிந்ததால், பின்பக்க சுவரை உடைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 25 பேர் உடல் கருகி பலியாயினர். கம்பெனி உரிமையாளர் ரஜப் அலி மற்றும் அவரது 10 வயது மகனும் பலியானவர்களில் அடங்குவர். 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மற்றொரு சம்பவம் இன்று காலை கராச்சி நகரில் உள்ள ஹப் ரிவர் ரோட்டில் கார்மென்ட் கம்பெனியில் இடம்பெற்றது. மின்கசிவு காரணமாக இங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜன்னல், சுவர்களை உடைத்து 60 பேரை மீட்டனர். படுகாயம் அடைந்திருந்த அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீயில் எரிந்து கரிக்கட்டையாகி கிடந்த 100 சடலங்களையும் தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் பலரை காணாததால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Tags
உலகச் செய்திகள்



