பங்களாதேஷிற்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்யாவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்.-பௌத்த பிக்குகள் எச்சரிக்கை


பங்களாதேஷில் பௌத்த விகாரைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையில் உள்ள சகல முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளாவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என பௌத்த பிக்குகளால் கண்டியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பங்களாதேஷில் பௌத்த விகாரைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டியில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றது. 

பௌத்த மதத்தை பாதுகாக்கும் இயக்கம் மற்றும் பொதுபலசேனா இயக்கமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பௌத்த பிக்குகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் ஜோர்ஜ் ஈ.டி. சில்வா கூரைப்பூங்கா வரை சென்று மீண்டும் தலதா மாளிகையை வந்தடைந்தது.

'இலங்கையிலுள்ள சகல முஸ்லிம்களும் பங்களாதேஷிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யாவிட்டால் பாரிய எதிர்விளைவுகளை சந்திக்க வரும். குறிப்பிட்ட சில நிறுவனங்களது பெயர்களை குறிப்பிட்டு தொடர்ந்து இயங்க வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவுசெய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் குரல் எழுப்பினர்.

இது தொடர்பான தமது அடுத்த நடவடிக்கைக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்த வேண்டும் எனவும் காலக்கெடு விதித்தனர்.

கிழக்கு மாகாணத்தின் பொது மரபுரிமையைப் பாதுகாப்போம், பௌத்த தலங்களைப் பாதுகாப்போம், பௌத்தனே விழித்தெழு. உங்கள் மதத்தை அவமதிக்காதீர். தீவிரவாத முஸ்லிம் தாக்குதலை கண்டிக்கின்றோம், பொறுத்தது போதும் என முதலான சுலோகங்களை ஏந்திச் சென்றனர்.
நன்றி-வீரகேசரி

Post a Comment

Previous Post Next Post