எனது கருத்துக்காக கவலையினை தெரிவித்துக் கொள்கின்றேன் – ஸர்மிளா ஸெய்யித்


பிபிசி செய்திச் சேவையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல் தொடர்பாக என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக் குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்கள், கருத்துக்களுக்கான எனது கவலையினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இஸ்லாத்தில் வன்மையாக எச்சரிக்கப்பட்டதும், ஹராமாக்கப்பட்டதும் விபச்சாரம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இஸ்லாமிய பெண்ணாக எந்தவித மாற்றுக்கருத்தும் எனக்கில்லை.

சமகால நடைமுறை தொடர்பான எனது கருத்தையே நான் பிபிசிக்கு தெரிவித்திருந்தேன். நான் இஸ்லாமிய சமூகப் பெண்ணாக இருக்கின்ற காரணத்திற்காக சமூக உண்மையை மறைக்க முடியாது என்ற அடிப்படையில் பாலியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது என்றும், அது சட்டபூர்மாக்கப்படும்போது அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெறவும் பாதுகாப்புப் பெறவும் வழியை ஏற்படுத்தும் என்பதே என் கருத்து.

பாலியல் தொழில் அங்கீகரிப்பட்டது என்றோ, அதில் யாவரும் ஈடுபடலாம் என்றோ நான் பிரச்சாரம் செய்யவில்லை. முஸ்லிம் சமூகத்தில் தடைசெய்யப்பட்ட விபச்சாரம் பாலியல் தொழில் என்ற அங்கீகாரத்துடன் ஏனைய சமூகத்தில் நடைபெறுவது அப்பட்டமான உண்மை. அந்த உண்மையையும் அதன் பாதிப்பையும், சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பையும் கவனத்திற் கொண்டுதான் எனது கருத்தை நான் வெளியிட்டிருந்தேன்.

ஒரு பெண்ணாக பாலியல் தொழிலை, பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதை வன்மையாககக் கண்டிப்பதாகக்கூடக் குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்து முஸ்லிம் சகோதரர்களை காயப்படுத்துவதாக, அல்லது பிழையான முறையில் விளங்கிக் கொள்ளத் தக்கதாக இருந்தால் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுகின்றேன்.

இவ்வண்ணம்,
ஸர்மிளா ஸெய்யித்

1 Comments

  1. "She should go for a public apology, not should she feel sad about!!!
    Mohamed

    ReplyDelete
Previous Post Next Post