பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ்களை இனங்காணும் வகையில் வெவ்வேறு நிறப்பூச்சுகளைப் பூசுவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம கையளித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. இலகுவாக இனங்காணும் வகையிலேயே இந்த நிறங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் சிவப்பு நிறத்திலும், தனியார் பஸ்கள் நீல நிறத்திலும் பாடசாலை பஸ்கள் மஞ்சள் நிறத்திலும் வெவ்வேறு நிறங்களால் வகைப்படுத்தப்படவுள்ளன.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45 இலட்சம் ஆகும். இ.பொ.ச மற்றும் தனியார் பஸ்களின் எண்ணிக்கை 20ஆயிரம் ஆகும்.
அத்துடன், முச்சக்கரவண்டிகள், கார்கள் மற்றும் கெப் ரக வாகனங்களின் தொகை 7 இலட்சம். பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வான்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளதாக மேற்படி அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
