நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இன ரீதியாக செயற்பட்டதாகக் கூறி உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைகளில் இன பாகுபாட்டுடன் அவர் செயற்பட்டதாகக் கூறியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த வழக்கினை தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் அனுசரணையுடன் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோற்றிய மாணவர்கள் சிலர் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
ரவூப் ஹக்கீம் நீதியமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் சட்டக்கல்லுரிக்கான அனுமதிகளை முஸ்லிம்கள் அதிகமாக பெற்றுள்ளதாகவும் அண்மையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளில் அடுத்தடுத்த இலக்கங்களைக் கொண்ட 20 முஸ்லிம் மாணவ மாணவியினர் கூடிய புள்ளிகளைப் பெற்று அனுமதிகளைப் பெற்றுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்த்கியுள்ளனர்.அத்துடன் சட்டக்கல்லூரி நுழைவு விடயத்தில் பரீட்சையானது நியாயமான முறையில் நடை பெறவேண்டும் என 2004 ஆம் ஆண்டு பிரதம நீதியரசர் பரிந்துரை செய்திருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் எவ்விதமான இன பாகுபாடும் காட்டப்படவில்லை எனவும் குறித்த பரீட்சையானது பரீட்சைகள் திணைக்களத்துடன் தொடர்புபட்டது எனவும் அதற்கும் நீதியமைச்சுக்கும் சம்பந்தம் கிடையாது எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
நன்றி : விடிவெள்ளி
