கடந்த இருபது வருடங்களாய் இந்திய அரசியலை ஆட்டி படைக்கும் ஒரே விஷயம் பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி பிரச்னை என்று சொன்னால் மிகையாகாது. 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அதன் தொடர்ச்சியாய் ஏற்பட்ட பாஜகவின் எழுச்சியும் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வும் குறிப்பிடத்தக்கவை. காந்தியின் படுகொலைக்கு பின் இந்திய அரசியலில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்வான பாபர் மசூதி இடிப்பின் ஆரம்ப விதை 1949 டிசம்பர் 22 அன்று தான் தொடங்கியது.
பாபர் மசூதியில் ராமர் அவதரித்தார் என்ற செய்தியால் 1949 டிசம்பர் 22 அன்று பாபர் மசூதி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அந்நாளில் என்ன நடந்தது என்பதை அயோத்யா : இருண்ட இரவு என்ற பெயரில் வெளி வரவிருக்கும் புத்தகத்தில் அதன் ஆசிரியர்கள் கிருஷ்ண ஜா மறறும் நிரேந்திர ஜா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். அப்புத்தகத்தில் அயோத்தியாவில் அச்சம்பவத்தில் ஈடுபட்ட பலரிடம் மேற்கொண்ட நேர்காணல்கள் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களை அப்புத்தகத்தில் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் இந்து மகாசபைக்கு அதிகாரத்தை பெற்று தர வேண்டும் என்ற வேட்கையில் உள்ளூர் சாதுக்களும் அதிகாரத்தில் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் செய்த திட்டங்களை அப்புத்தகம் விளக்குகிறது. 1949 டிசம்பர் 22 அன்று நடந்த சம்பவங்களை பின்வருமாறு அப்புத்தகம் விவரிக்கின்றது.
நிர்வாணி அகோராவை சார்ந்த 6 அடி உயரமுள்ள பாபா ஆப்ரஹாம் தாஸ் எனும் சாது தான் இத்திட்டத்தை அரங்கேற்றியவர். ராமஜென்மபூமி உத்தரக் (ராமஜென்மபூமியை விடுவித்தவர்) என்று பின்னாளில் அழைக்கப்பட்ட உத்தரக் பாபா 1981ல் இறந்து போனார். இறந்து போன பாபாவின் சகோதரர்கள், உறவினர்கள், தோழர்கள் என பலரிடமும் நேர்காணல் நடத்தியதின் அடிப்படையிலேயே இத்தகவல்களை வெளியிடுவதாக அப்புத்தக ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பாபர் மசூதி நிலத்தை மூன்றாக பிரித்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிர்வாணி அகோராவுக்கும் ஒரு பங்கை கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். உத்தரக் பாபாவின் திட்டத்தின் படி உத்தரக் பாபா, பாபா ராமச்சந்திரா தாஸ் பரமஹம்ஸ், விரிந்தாவன் தாஸ் ஆகிய மூவரும் டிசம்பர் 22, 1949 நள்ளிரவில் அப்பள்ளிவாயிலில் நுழைந்து ராமர் சிலையை மத்திய கூம்பில்வைத்து விடுவது என்றும் அதிகாலையில் அங்கு சாதுக்கள் கூட்டத்தை கூட்டி தங்கள் கைவசம் அப்பள்ளியை கைப்பற்றி கொள்வது என்றும் முடிவெடுத்தனர்.
ஆனால் அன்று உத்தரக் பாபாவுடன் பள்ளிக்குள் நுழைய வேண்டிய இருவரும் அன்று வரவில்லை. தற்போது தான் தான் அப்பள்ளியில் ராமர் சிலையை வைத்ததாக பாபா ராமச்சந்திரா கோருவது தனி விடயமாகும். இரு பாபாக்களும் வராததால் உத்தரக் பாபா தன் இரு ஒன்று விட்ட சகோதரர்கள் இந்து சேகர் ஜா மற்றும் யுகல் கிஷோர் ஜாவுடன் ராமர் சிலையை எடுத்து கொண்டு பள்ளிவாயிலில் உள்ளே நுழைகிறார்கள்.
பள்ளிவாயிலின் உள்ளே இருந்த பாபர் மசூதி பள்ளியின் உதவி இமாம் முகமது இஸ்மாயில் இவர்களை எதிர்க்க இஸ்மாயிலை சராமாரியாக அடித்து அங்கிருந்து துரத்துகிறார்கள். காலை சூரியன் புலர்வதற்காக ராமர் சிலையை அங்கு வைத்து விட்டு உத்தரக் பாபாவும் அவரின் தோழர்களும் அமர்ந்திருக்க உள்ளூர் விசுவ இந்து பரிஷத் தலைவர் கோபால் சிங்கோ பத்திரிகை அலுவலகம் ஒன்றில் பாபர் மசூதியில் ராமர் எழுந்த அதிசயம் குறித்த செய்தியை அச்சிட்டு கொண்டிருக்கிறார்.
அதிகாலை சூரியன் உதிப்பதற்குள் டிசம்பர் 23 அன்று சுமார் 4 மணிக்குள் பாபர் மசூதிக்கு வந்த அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் கே.கே. நாயர் 9 மணி வரை தன் மேலதிகாரிகளுக்கு எத்தகவலும் தெரிவிக்காமல் ராம பக்தர்களும் சாதுக்களும் அப்பள்ளியை கைப்பற்றும் நடவடிக்கைக்கு ஆதரவாய் நின்றார். மலையாளியான கே.கே. நாயர் இந்துத்துவ சிந்தனை கொண்டவராக அறியப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அப்புத்தகத்தில் இச்சம்பவம் நடப்பதற்கு ஒரு தினம் முன்னதாக டிசம்பர் 21 அன்று நாயர் உள்ளூர் சாதுக்கள் சிலரை அயோத்திலுள்ள ஜம்ப்வந்த் குயிலா எனும் கோயிலில் சந்தித்து பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மகந்த் திக்விஜய் நாத் எனும் சாதுவின் சீடர்கள் பெருமளவில் பங்கெடுத்ததாகவும் அதற்கு பரிசாக திக்விஜய் நாத் அடுத்த நாளே இந்து மகாசபையின் தேசிய பொது செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இத்திக்விஜய் நாத் காந்தி படுகொலையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டவர் என்றும் திக்விஜய்நாத் கே.கே. நாயரின் நெருங்கிய தோழர் என்றும் அத்தோழமையின் விளைவாகவே இந்து மகாசபைக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் எனும் அடிப்படையில் பாபர் பள்ளியில் ராமர் அவதரித்த திட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. அப்போதைக்கு உடனடி பலன் கிடைக்காவிட்டாலும் 1992 டிசம்பர் 6ல் நிகழ்த்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பிற்கும் அதை தொடர்ந்த பாஜகவின் அரசியல் எழுச்சிக்கும் இதுவே அடித்தளம் என்பதை மறுக்க முடியாது.
நன்றி: இந்நேரம்
Tags
உலகச் செய்திகள்
