முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் 7 நாட்களுக்குள் தமக்கு வழங்க வேண்டும் - பொதுபலசேனா.


புதிதாக நாட்டில் நிர்மாணிக்கப்படும் அனைத்து பள்ளிவாசல்களும் ஜிஹாதுக்கான பங்கர்கள் என பொதுபலசேனா  குற்றஞ்சாட்டியது. கொழும்பில் இன்று மாலை அவ்வமைப்பின் தலைவரும், செயலாளரும் இணைந்து தமது தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இக்குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் ஒவ்வொரு நகரங்களிலும் பள்ளிவாசல்களை புதிதாக அமைப்பதற்கு முஸ்லிம்களில் வஹாபிகள் முயற்சிக்கின்றனர். ஏனெனில் அவை ஜிஹாத்துக்கான பங்கர்களாக பயன்படுத்தப்படவுள்ளன. நாம் பாரம்பரிய  முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஜிஹாதை ஊக்குவிக்கும் வஹாபி மற்றும் சலபி பிரிவினரின்  செயற்பாடுகளையே  எதிர்க்கிறோம்.

முதலில் எமது நாட்டுப்பிரதமரை நாட்டிலிருந்து விரட்டவேண்டும். அல் சபாப் அமைப்புக்கு நிதி உதவி வழங்கும்   சவூதி அரேபிய புலனாய்வுத்துறை தலைவரான ஜமான் அல் சஹ்ரானுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தவர் பிரதமரே. ஜமானின்  நிதிப்பங்களிப்பிலேயே பீஸ் ரி.வி. இயங்குகின்றது. தற்போது நாட்டில் 10 முஸ்லிம் அமைப்புக்கள் ஜிஹாதை ஊக்குவித்து வருகின்றன. இவர்கள் மூலமே ஜிஹாத்துக்கான நிதி வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது.எமது உயிரைக் கொடுத்தேனும் நாட்டை நாம் பாதுகாப்போம் என தெரிவித்தனர்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் உயர் பதவி வகிக்கும் உலமாக்கள் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்கள் மீதும் பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அமைச்சர் ஹக்கீம், ஹசன் அலி எம்.பி. ஆகியோருக்கு எதிராகவும் பொதுபலசேனாவின் தலைவரும் செயலாளரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

அத்துடன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் அடுத்துவரும் 7 நாட்களுக்குள் கலாசார அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வுத்துறை ஆகியன தமக்கு வழங்க வேண்டும் என  தெரிவித்துள்ள பொதுபலசேனா தவறும் பட்சத்தில்  தமது அமைப்பு  அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றினை எடுக்கவேண்டி ஏற்படுமென எச்சரித்தது.

நன்றி : விடிவெள்ளி இணையம்

Post a Comment

Previous Post Next Post