சமாதானத்தையும், அமைதியையும் ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமையாகும்.-ACJU


(ஊடக அறிக்கை)
January 04, 2013


சமாதானத்தையும், அமைதியையும் ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமையாகும்.


இலங்கை வாழ் மக்கள் மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின் அமைதியான, சுதந்திரமான சூழலை எதிர்பார்த்திருக்கின்ற நிலையில் சமூகங்களுக்கெதிராக வீண் வதந்திகளை பரப்பி இன ரீதியான பிளவுகளை மீண்டும் உறுவாக்க சில பேரினவாத தீய சக்திகள் முயற்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும், பாரதூரமானதுமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பௌத்தர்கள் மாத்திரம் என்பதாகவும், அதன் வெற்றி குறிப்பிட்டதோர் சமூகத்துக்கெதிரான வெற்றியாகவும், அந்த யுத்த வெற்றியின் சொந்தக்காரர்கள் பௌத்தர்கள் மாத்திரமே என்றும், ஏனையவர்கள் இந்நாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சமூகங்களை வழிநடாத்த வேண்டிய பொருப்பு வாய்ந்த மதப் தலைவர்களில் சிலர் இவ்வாறான பிரிவினைவாத முயற்சிகளை முன்னின்று மேற்கொண்டு வருவது மிகவும் ஆபத்தானதாகும். மற்றொரு சமூகத்திற்கெதிராக பொய்ப்பிரசாரம் செய்வதையோ அவர்களுக்கெதிராகவும் மக்களைத் தூண்டி விடுவதையோ எந்தவொரு சமயமும் வழிகாட்டவில்லை.

இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களின் மத உயர்பீடமான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சிங்களவர்களிடம் வரி அறவிடுவதாகவும், அப்பணத்தினை பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்குவதாகவும் இவர்கள் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். இது இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற பாரிய அவதூறு மாத்திரமன்றி எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை குறை காண்பதுமாகும் என நாம் கருதுகின்றோம்.

கடந்த முப்பது வருட கால யுத்த வரலாற்றில் 1990ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டதனையும் இரு தசாப்ச காலமாக இன்று வரை அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதனையும் இம்மதத் தலைவர்கள் மறந்து விட்டாலும் எமது நாட்டு மக்கள் அதனை மறந்துவிட மாட்டார்கள். மீண்டும் 2008ல் மூதூரிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டதனையும் இவர்களால் மறைக்க முடியாது.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தின் வெற்றி எமது நாட்டை நேசிக்கின்ற அனைத்து இலங்கையருக்கும் சொந்தமானது என்று மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்ததை இவர்கள் பொய்ப்பிக்க முயல்கின்றனர் என்றே நாம் கருதுகின்றோம்.

சமாதானத்தையும், அமைதியான சூழலையும் உருவாக்குவதும், அதற்கு உதவி செய்வதும், அதனைப் பாதுகாப்பதும் இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது. யுத்தத்தை வென்று தந்த அரசை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 2009ல் பாராட்டி விழா எடுத்தது இஸ்லாத்தின் சிறந்த போதனைகளின் அடிப்படைகளை ஒட்டியதாகும்.

அவ்வாறே எமது நாட்டுக்கெதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணையை தோற்கடிக்க முஸ்லிம் நாடுகளை ஒன்று திரட்டி எமது தாய் நாட்டை பாதுகாப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜெனீவா வரை சென்று வந்ததை இவர்கள் மறந்தாலும் எமது நாட்டின் வரலாறும், மக்களும் மறக்க மாட்டார்கள்.

இலங்கை முஸ்லிம்கள் தேசிய ரீதியாகவோ அல்லது சர்வதேச ரீதியாகவோ பயங்கரவாத தொடர்புகள் எதனையும் கொண்டவர்கள் அல்ல என்பதை எமது நாட்டின் வரலாற்றை படிக்கின்ற எவரும் அறிவர். அத்தோடு அவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானதுமாகும். சமூக விரோத செயற்பாடுகளுக்கு ஜம்இய்யத்துல் உலமா எந்த வகையிலும் ஆதரவு வழங்காது என்பதை எமது நாடும் அரசாங்கமும் நன்கறியும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வரலாற்றில் அரசுக்கெதிராகவோ அல்லது மற்றொரு சமூகத்திற்கெதிராகவோ சிறியதோர் ஆர்ப்பாட்டத்தைக் கூட நடாத்தியதில்லை. வன்முறைகளாலோ கிளச்சிகளாலோ எதனையும் அடைந்து கொள்ள முடியாது. மாற்றமாக பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல்கள் மாத்திரமே தீர்வுகளைப் பெற்றுத்தரும் என்பது எமது நிலைப்பாடாகும்.

எனவே, அடிப்படைகளற்ற பொய்க் குற்றச்சாட்டுகளால் எமது நாட்டின் அமைதியையும் இயல்பு நிலையையும் பாதிக்கச் செய்கின்ற வகையில் இன ஒருமைப்பாட்டுக்கு எதிராக மக்கள் தூண்டப்படாதிருக்க மதத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
தேசிய பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Post a Comment

Previous Post Next Post