ரிசானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வீடொன்றை கட்டிகொடுக்க சவூதி தனவந்தர் ஒருவர் முன் வந்துள்ளார்.



சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு சவூதி தனவந்தர் ஒருவர் முன் வந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்தி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சவூதியில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரிசானா நபீக்கின் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்திற்கொண்டு அவர் எந்த நோக்கத்திற்காக சவூதிக்குச் சென்றாரோ அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தொடர்பில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர் ஒருவர் இதற்கு முன்வந்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவருடன் கலந்துரையாடிய போது 04 மாத காலத்திற்குள் ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக்கொடுப்பதற்கு அவர் முன் வந்துள்ளதாகவும் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நன்றி : வீரகேசரி 

Post a Comment

Previous Post Next Post