ரிஷானாவின் உயிரைக் காக்க எடுத்த இறுதி கட்ட முயற்சிகள்….!!


மரண தண்டனையிலிருந்து ரிஸானா நபீக்கின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கையும், சவூதி அரேபியாவும் மேற்கொண்ட இறுதி கட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மரண தண்டனை நிறைவேற்றப்படு வதற்கு முன்னரான இறுதிகட்ட முயற் சிகளை இங்கு பிரத்தியேகமாகத் தருகின்றோம்.

கோத்திரத் தலைவர் ஹுமைத் அல் உத்தைபியுடன்

ரிஸானா நபீக்கை மரண தண்ட னையிலிருந்து விடுவிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிரதிநிதியாக சவூதி அரேபியாவில் தங்கி இருந்து செயற்பட்ட அப்துல் காதர் மஸ¤ர் மெளலானா அங்கு இறுதிக் கால கட்டத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை அப்படியே சொல்லுகின்றார்.

சவூதி அரேபியாவிலிருந்து நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ள ஜனாதிபதியின் மத்திய கிழக்கு விவகா ரங்களுக்குப் பொறுப்பான இணைப்புச் செயலாளர் அப்துல் காதர் மஸூர் மெளலானா கூறியதாவது, ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் அது தொடர்பாக எமது ஜனாதிபதியின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வந்தேன். அச்சமயம் ஜனாதிபதி அவர்கள் ரிஸானாவின் உயிரைப் பாதுகாப்பதற்காக உச்சகட்ட முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமக்கு ஆலோசனை வழங்கினார். அத்தோடு ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து ரிஸானாவை உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் படி சவூதி அரேபியாவிடம் எமது ஜனாதிபதி மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

எமது ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் சவூதியரேபியாவில் கடமையாற்றும் இலங்கைத் தூதுவர் அஹ்மட் ஏ. ஜவாத்துடன் நானும் இணைந்து ரிஸானா பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் கோத்திரத் தலைவரான ஷேஹ் பைசல் ஹுமைத் அல் உத்தைபி அவர்களையும் உதவி தலைவரையும் நேரில் சென்று கடந்த திங்களன்று (07.01. 2013) சந்தித்தோம். எம்முடன் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரக மொழி பெயர்ப்பாளர் ஸக்கரியாவும் இணைந்துகொண்டார்.

இச்சந்திப்பு சுமார் இரு மணித்தியாலங்கள் கோத்திரத் தலைவரின் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது ரிஸானாவின் உயிரைப் பாதுகாக்க உதவுமாறு கோரினோம். அதற்கான நியாயங்களை அவருக்கு எடுத்துக் கூறினோம். இச்சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்தது. எமது பக்க நியாயங்களை செவியேற்ற கோத்திரத் தலைவர் ‘இவ்விவகாரம் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. உங்கள் நாட்டு தலைவர் (ஜனாதிபதி) இவ்விடயத்தில் எடுத்த விஷேட கவனத்தையிட்டு நாம் ரிஸானாவை மரண தண்டனையிலிருந்து பாதுகாக்கவென பெரிதும் முயற்சி எடுத்தோம். ஆனால் உயிரிழந்த குழந்தையின் தாய் மன்னிப்பு வழங்க முடியாது என்பதில் பிடிவாதமாகவுள்ளார். இதனால் எமது முயற்சி கைகூடவில்லை.

அதேநேரம் இவ்விவகாரம் தொடர்பாக இக்குழந்தையின் தந்தையை முதலில் அழைத்துப் பேசினோம். அங்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. அதனால் அத்தந்தை கடமையாற்றும் நிதியமைச்சின் உயரதிகாரியான அப்துல் அஸீஸ் பேசான் அல் உத்தைபியை அழைத்துப் பேசி அவரூடாகவும் சமரச முயற்சியை மேற்கொண்டோம். அதுவும் பலனளிக்கவில்லை.

இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு உச்ச மதிப்பளித்து குறித்த பெற்றோரிடம் ரிஸானா வுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுத்திட நாம் பல முயற்சிகளை மேற்கொண்டோம். அம்முயற்சிகள் பலனளிக்காதது எமக்கு கவலையாக உள்ளது என்றார்.

“இதேவேளை எனது மனைவி, குறித்த குழந்தையின் தாயாரான நாயிப் ஜிஸியான் கலாப் அல் உத்தைபியை கடந்த 6ம் திகதி அவரது இல்லத்தில் சந்தித்து ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்குமாறும் அதற்குரிய நியாயத்தையும் எடுத்துக் கூறிக் கேட்டுக்கொண்டார்.

இதேநேரம் கடந்த 5ம் திகதி நான் ரிஸானா நபீக்கை அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்தேன். அச்சமயம் அவர், “மெளலானா என்னை வந்து பார்த்து விட்டுச் செல்லுகிறீர்கள். எப்போது என்னை விடுவித்து அழைத்துச் செல்வீர்கள் எனக் கேட்டார். அச்சமயம் அவருக்கு ஆறுதல் கூறினேன்’

ரிஸானா சிறையில் இருக்கும்போது பொழுது போக்குக்காக ரேந்தை பின்னக்கூடியவராக இருந்தார். அதனால் அவருக்குத் தேவையான நூல் வகைகளையும் அன்றும் எடுத்துக்கொடுத்துவிட்டே வந்தேன்’

இதேவேளை எமது ஜனாதிபதியின் வேண்டுகோளை கெளரவிக்கும் வகையில் சவூதி அரேபிய இளவரசர் ஸல்மான் குறித்த பெற்றோருடன் தொடர்புகொண்டு நோய் வாய்ப்பட்டிருக்கும் உங்களது குழந்தையை எனது சொந்த செலவில் ஜேர்மனிக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து குணப்படுத்திவிடுகின்றேன். உயிரிழந்துள்ள பிள்ளைக்கு இழப்பீட்டுத் தொகையையும் வழங்குகின்றேன். ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்கிவிடுமாறு கூறினார். இச்செய்தியை நானே அக்குடும்பத்தினருக்குப் பரிமாறினேன். அப்பெற்றோரின் குழந்தையொன்று சவூதி அரேபியாவிலேயே குணப்படுத்த முடியாத நோயொன்றுக்கு உள்ளாகியுள்ளது.

இதேநேரம் இளவரசர் ஸல்மான், பெண்கள் குழுவொன்றை குறித்த குழந்தையின் தாயிடம் அனுப்பி ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டார். இதேபோல் சவூதி அரேபியாவின் மறைந்த இளவரசர் நாயிப் பின் அப்துல் அஸீஸூம் ரிஸானாவுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக பல முயற்சிகளை ஏற்கனவே எடுத்திருந்தார். இருப்பினும் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.

என்றாலும் சவூதி அரேபியா சட்டப்படி ஒரு தீர்ப்பு வெளியாகி அத்தீர்ப்பு மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு விடும். ஆனால் ரிஸானா விவகாரத்தில் எமது ஜனாதிபதி விஷேட கவனம் செலுத்தியதன் பயனாக அவருக்கான தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு சவூதி அரேபிய அரசு ஏழு வருடங்கள் தாமதித்தது. இதனூடாக குறித்த குழந்தையின் பெற்றோரிடம் மனமாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இவ்வாறான நிலையில் தான் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்று மிகுந்த மனவேதனையோடு கூறினார் மஸூர் மெளலானா.

நன்றி :தினகரன்

Post a Comment

Previous Post Next Post