அமெரிக்கா ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!

mahinda obama
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பராக் ஒபாமா இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக அண்மையில் நீங்கள் மீண்டும் தெரிவானதைத் தொடர்ந்து நீங்கள் இரண்டாவது முறையாகவும் பதவிப்பிரமாணம் செய்திருப்பதையிட்டு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


உங்களுடைய சிறந்த தலைமைத்துவமும் அனுபவமும் உங்களது நாட்டைத் தொடர்ந்தும் சுபீட்சத்தையும் உயர்ந்த வளர்ச்சியையும் நோக்கிக்கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஐக்கிய அமெரிக்க மக்களிடமிருந்து நீங்கள் பெற்றுள்ள அமோக ஆதரவு உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாய் உள்ளது.


உங்களது முதலாவது தவணைக்காலத்தின் போது சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உங்களது நாட்டை வெற்றிகரமாக வழிநடாத்த உங்களுக்கு முடிந்ததுடன், சமூகத்தில் பின்தங்கிய தரப்பினர்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கு உதவும் கொள்கை சீர்த்திருத்தங்களை துணிவுடன் முன்னெடுக்கக் கூடியதாகவும் இருந்தது.


இலங்கையும் ஐக்கிய அமெரிக்காவும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார துறைகளில் பாரம்பரியமாக வழுவான தொடர்பைக்கொண்டுள்ளன. உங்களது தலைமைத்துவத்தின் கீழ் எமது இரண்டு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளும் மேலும் முன்னேற்றகரமாகவும் பல புதிய கூட்டுறவு வழிகளை விரிவுபடுத்துவதாகவும் அமையுமென நான் நம்புகிறேன்.


எமது இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக உங்களோடு இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்த்துள்ளேன். உங்களது ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கான எனது நல்வாழ்த்துக்களை தயவு கூர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post