குற்றம் நிரூபிக்கப்படாமலேயே றிசானாவுக்கு மரணதண்டனை - வெளிவிவகார அமைச்சு

தினகரன்:ரிஸானா நபீக்கிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு விசாரணை அடங்கலான சகல செயற்பாடுகளிலும் குறைபாடு காணப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் எம். ஆர். ஹம்ஸா தெரிவித்தார்.

தண்டனை நிறைவேற்றும் தினம் வரை ரிஸானா தனது தண்டனை குறித்து அறிந்திருக்கவில்லை என்று கூறிய அவர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் குறித்து வினவியதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

ரிஸானா 6 வாரங்கள் தான் சவூதியில் பணி புரிந்தார். அவருக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரிந்திருக்கவில்லை. குழந்தைகளை பராமரிக்கும் பயிற்சியும் அவருக்கு இருக்கவில்லை. அவர் தினமும் 3 தடவை குழந்தைக்கு பாலூட்டி வந்துள்ளார். சம்பவ தினம் 2 தடவை பாலூட்டிய போதும் எதுவித பிரச்சினையும் எழவில்லை. மூன்றாவது தடவையே குழந்தை மூச்சுத்திணறி இறந்துள்ளது.

பக்கத்துவீட்டிலுள்ள தெலுங்கு பெண்ணே ரிஸானாவுக்கு மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டார். சரியாக தகவல் பரிமாறப் படாததாலும் ரிசானா கொலை குற்றவாளியாக்கப்பட்டார். மருத்துவத்தின் அறிக்கையிலும் கொலைக்கான ஆதாரமெதுவும் இருக்கவில்லை எனவும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலே மேன்முறையீடு செய்யப்பட்டதோடு மேன்முறையீட்டு நீதிபதிகளாகவும் முதலில் விசாரணை நடத்திய நீதிபதிகளே நியமிக்கப்பட்டிருந்தனர். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ புதிய சாட்சிகளை அழைக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய அவர் சந்தேகத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாமலே ரிஸானாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ரிஸானாவிற்கு மரண தண்னை விதிக்கப்பட்டது தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. அவரை சென்று சந்தித்து வந்த டாக்டரூடாகவே எமக்குத் தகவல் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார். ரிஸானாவின் ஜனாஸாவை ஒப்படைக்குமாறு தூதரகத்தினூடாக அறிவித்திருந்த போதும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

ரிஸானாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு சவூதி அரேபிய அரசாங்கம் பதிலளித்துள்ளது குறித்து வினவியதற்குப் பதிலளித்த அவர், வெளிவிவகார அமைச்சிற்கு அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்று கூறினார். நாட்டுத் தலைவரொருவர் நேரடியாக தலையிட்டு ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

இதே வேளை சவூதி அரேபிய செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக் கையில், ரிஸானா நபீக் சிறுமி எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டில் ரிஸானாவுக்கு 21 வயது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப் பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிஸானா தொடர்பான வழக்கு விசாரணை நியாயமாக இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டையும் சவூதி நிராகரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post