அஸ்வர் எம்.பி.க்கு அச்சுறுத்தல்!

கடந்த திங்கட் கிழமை முதல் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமிருப்பதாக பாராளுமன்ற பேரவையின் உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
 
கடந்த திங்கட் கிழமை இரவு தனக்கு வந்த முதலாவது தொலைபேசி அழைப்பில், புதிய நீதியரசராக மொஹான் பீரிஸை நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்தால் அத்தோடு உங்கள் கதை முடியும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அஸ்வர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
 
செவ்வாய்க்கிழமையும் இதுபோன்ற அழைப்புகள் தனக்கு வந்ததாகவும் இதுகுறித்து சபாநாயகரிடமும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுர சேனநாயக்கவிடமும் தான் முறையிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
குறித்த தொலைபேசி அழைப்பானது ஹல்ப்ஸ்ரொப்பிலுள்ள தொலைபேசி கூண்டு ஒன்றிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது என்பதை தான் பின்னர் அறிந்து கொண்டதாகவும் இதே பகுதியிலுள்ள தொலைபேசிக் கூண்டிலிருந்து அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்வர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் அஸ்வர் எம்.பி.யிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுர சேனநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
-விடிவெள்ளி-

Post a Comment

Previous Post Next Post