சரண குணவர்தனவுக்கு அத்தனகல நீதவான் பிடியாணை.

பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு அத்தனகல நீதவான் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

நிட்டம்புவ, ஹொரகொல்லையில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற  வீட்டுத்தொகுதியின் மீது தாக்குதல் நடத்தினார். என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் பிரதிவாதியான பிரதியமைச்சர் சரண குணவர்தன நீதிமன்றத்தில் ஆஜராகாததையடுத்தே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த பிடியாணையை அத்தனகல பிரதி பொலிஸ் மா அதிபரினூடாக செயற்படுத்துமாறு அத்தனகல நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ருவான் சிசிர உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்களான அத்தனகல பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். 

பிரதிவாதியான பிரதியமைச்சர் சரண குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணி பிரதிவாதியான பிரதியமைச்சர் நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்ற விசேட கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு சென்றுள்ளமையினால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணம் எதுவும் இன்றைய தினம் (நேற்று) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமையினால் பிரதிவாதிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிநின்றார்.

இதனையடுத்தே மேலதிக நீதவான் ருவான் சிசிர பிடியாணை பிறப்பித்தார்.

நன்றி : தமிழ் மிரர்

Post a Comment

Previous Post Next Post