பொறுப்புக்களை வழங்கியிருந்தால் ரிஸானாவை மீட்டிருப்பேன்-அசாத் சாலி

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானாவை மீட்கும் பொறுப்பை என்னிடம் வழங்கியிருந்தால் சவுதியில் மிகவும் செல்வாக்குடன் இருக்கின்ற இலங்கையரான சாதிக் ஹாஜியாரைக்கொண்டு ரிஸானாவை பாதுகாத்திருப்பேன். ஆனால் அதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் வழங்கவில்லை என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

சட்டம் இல்லாத நாட்டில் நீதித்துறை அமைச்சராக ரவுப் ஹக்கீம் செயற்படுகின்றார். வரலாற்றில் முஸ்லிம் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத அமைச்சர் என்ற பெயரை ரவுப் ஹக்கீம் பெற்றுவிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டு நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அசாத் சாலி அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

ரிஸானாவை பாதுகாப்பதற்காக அரசாங்கம் உரிய முறையில் எதனையும் செய்யவில்லை. ஷரியா சட்டம் என்பது மன்னராலும் மன்னிப்பு வழங்கப்பட முடியாத ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. அதனை விமர்சிக்க முடியாது.

ஆனால் பாதிக்கப்பட்ட அந்த சவுதி குடும்பத்துடன் இலங்கை பிரதிநிதிகள் பேச்சு நடத்தவில்லை. ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கும் குறித்த சந்தர்ப்பத்திலும் அது தொடர்பான அதிகாரி இறந்த குழந்தையின் தாயைப் பார்த்து மன்னிப்பு வழங்க முடியுமா என்று வினவியதுடன் மன்னிப்பு என்பது சிறந்த பண்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த தாய் எக்காரணத்தைக்கொண்டும் முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எமது நாட்டின் பிரதிநிதிகள் சவுதிக்கு சென்றபோது குழந்தையின் பெற்றோருடன் பேச்சு நடத்தவில்லை. மேலும் இந்த பொறுப்பை என்னிடம் விட்டிருந்தால் நான் ரிஸானாவை விடுதலை செய்திருப்பேன்.

இலங்கையில் பிறந்த சாதிக் ஹாஜியார் என்பவர் சவுதியில் பிரஜையாக இருக்கின்றார். அவர் அங்கு மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கின்றார். அவருக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டிருந்தால் அவர் ரிஸனாவை விடுதலை செய்யும் முயற்சிகளை வித்தியாசமான முறையில் முன்னெடுத்திருப்பார்.

ஆனால் அவ்வாறு கடிதம் ஒன்றை சாதிக் ஹாஜியாருக்கு வழங்குமாறு நான் வெளிநாட்டு வேலைவாய்பு மற்றும் நலன்புரி அமைச்சரிடம் கேட்டபோது அவர் முடியாது என்று கூறிவிட்டார். அன்று கடிதம் வழங்கப்பட்டிருந்தால் ரிஸானாவின் விடுதலை உறுதியாகியிருக்கும். சவுதி மன்னரே மில்லியன் கணக்கான ரியாத்களை தருவதாக கூறி விடுதலை கோரியுள்ளார். ஆனால் அந்தத் தாய் மறுத்துவிட்டார்.
 

Post a Comment

Previous Post Next Post