பொதுபல சேனாவுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு.


'இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிராக நாம் போராடவில்லை. பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்' என்று பொதுபல சேனா அமைப்பு, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளது. 

நாட்டில் தற்போது எழுந்துள்ள இனவாதப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்பின் அங்கத்தவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இன்று இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில், மேற்படி அமைப்பின் அங்கத்தவர்களான விமலஜோதி தேரர், விதாரன்தெனியே நந்த தேரர், கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோருடன் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பசில் ராஜபக்ஷ, தினேஸ் குணவர்தன ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் விரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார். 

இதன்போது, முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வமைப்பினரிடம் கோரியுள்ளார். 

இதற்கு பதிலளித்த அவர்கள், 'பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்' என்று கூறியுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

Post a Comment

Previous Post Next Post