மாலியில் இஸ்லாமியப் போராளிகளின்மீது பிரான்ஸ் தாக்குதல்

ஆப்பிரிக்காவிலுள்ள மாலி நாட்டில் இஸ்லாமியப் போராளிகளின்மீது பிரான்சு நாடு தாக்குதல் தொடுத்துள்ளது. 

இந்நாட்டின் வடக்குப் பகுதியைத் தங்களது ஆளுமையில் வைத்துள்ள போராளிகள் இஸ்லாமிய மொரொக்கோவில் அல் காயிதா (Al Qaeda in the Islamic Maghreb - AQIM) எனும் அமைப்புடன் தொடர்புடையவர்கள். மாலி நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரான இவர்கள் நாட்டை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, சர்வேதச அளவில் தீவிரவாத தாக்குதலைத் தொடுக்க மாலியை ஏவுதளமாக அமைத்துக்கொள்வார்கள் என்று மேற்குலக நாடுகள் சிலகாலமாக அச்சம் அடைந்திருந்தன.

மாலி நாட்டு அரசாங்கத்திற்கும் அதன் வடக்குப் பகுதியைத் தம் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்த அன்ஸார்தீன் எனும் போராளி அமைப்பிற்கும் இடையே சண்டை நிகழ்ந்து வந்தது. இதில் அரசாங்கம் முழுவீச்சுடன் போரிடவில்லை என்று அதிருப்தி கொண்ட மாலியின் இராணுவம் கடந்து ஆண்டு இராணுவப் புரட்சி நிகழ்த்தி தலைநகரை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. பின்னர் மேற்குலக நாடுகள், ஐ.நா., ஆகியன அளித்த அழுத்தத்தின் காரணமாய் இடைக்கால அரசாங்கம் நியமிக்கப்பட்டது. இந்த இராணுவப் புரட்சியினால் மத்தியில் நிகழ்ந்த தடுமாற்றத்தை சாதமாக்கிக்கொண்டு அன்ஸார்தீன் அமைப்பு நாட்டின் அதிகப்பகுதியான இடங்களைக் கைப்பற்றியது. மாலி முஸ்லிம் நாடாக இருந்தாலும் மதக்கொள்கைகளில் தீவிரமான நாடாக இருந்ததில்லை. இங்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை அமல்படுத்துவதே தங்களது முக்கிய நோக்கம் என்று அன்ஸார்தீன் அமைப்பு அறிவித்துள்ளது. தாங்கள் கைப்பற்றிய நகரங்களில் அவர்கள் இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக அமல்படுத்த ஆரம்பித்தனர். தர்கா, கல்லறை போன்றவற்றை இடிக்க ஆரம்பித்தனர். அவை தொண்மையானவை; மாலியின் கலாச்சாரப் பெருமைமிக்க அடையாளங்கள் என்று UNESCO எதிர்ப்பு தெரிவித்தது.

பலவீனமான அரசாங்கம் அமைந்த தமது முன்னாள் காலனி நாடான மாலியைக் கூர்ந்து கவனித்துவந்த ஃபிரான்சு நாடு, அங்கு தோன்றியுள்ள அடிப்படைவாத இஸ்லாமியப் போராளி அமைப்பு, அல்-காயிதாவுடன் தொடர்புடையது. அதை அழித்து ஜனநாயக ஆட்சியை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று போரில் இறங்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்சு நிகழ்த்திவரும் கடுமையான வான்வெளித் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் நிகழ்த்திய போராளி அமைப்புகள்  தலைநகர் பாமாகோவிற்கு 350 கி.மீ, தூரத்தில் உள்ள டியாபாலி (Diabaly) என்ற நகரை எளிதாக வசப்படுத்தியுள்ளன. கட்டுக்கோப்புடனும், தகுந்த தற்காப்பு வசதிகளுடனும், போருக்குத் தயாரான நிலையில் போராளி அமைப்புகள் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2500 இராணுவ வீரர்களை அனுப்பியுள்ள பிரான்சு நாடு, ‘வெகுவிரைவில் தரைவழித் தாக்குதல் நடைபெறும், போராளிகளை முறியடிப்போம்’ என்று அறிவித்துள்ளது. “பிரான்சு வலையில் வந்து சிக்கியுள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்றவற்றைவிட ஆபத்தான வலை இது” என்று போராளிக் குழுக்களின் தலைவர்களுள் ஒருவரான உமர் உல்த் ஹமாஹா (Omar Ould Hamaha) தெரிவித்துள்ளார்.

1 Comments

  1. வாய் வீரம் எங்கு போய் முடியும் என கடாபியை கொன்று குபுறை லிபியாவுக்கு உள்ளே விட்டவர்கள் இப்படித்தான் மாலியிலும் சோமாலியாவிலும் சிரியாவிலும் யெமனிலும் மண்ணோடு மண்ணாகப்படுவார்கள் என்பது நிட்சயம் இதுதான் வெள்ளையர்களின் கணிப்பும் கணக்குத்தீர்ப்பும்

    ReplyDelete
Previous Post Next Post