மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் பெரியபாலம் சந்தியில் இருந்து
ஷாஃபி நகர் வரையான பாதைக்கு ரிஸானா நபீக் என பெயரிடப்படவுள்ளதாக தகவல்
தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித்
சியம்பலாப்பிட்டிய குறிப்பிடுகின்றார்.
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த பாதை
அபிவிருத்தி செய்யப்பட்டு அதற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் பெயரை சூட்டவுள்ளதாக அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
மூதூர் ஹாஃபி நகர் பகுதியில் அமைந்துள்ள ரிசானாவின் வீட்டிற்கு மாலை
சென்றிருந்த அமைச்சர் அவரின் வீட்டை நிர்மாணிப்பதற்கு நிதியுதவி
வழங்கினார்.
தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதுடன் வீட்டை
நிர்மாணித்தல் மற்றும் சகோதரர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்
கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே ரிசானா வெளிநாட்டிற்கு சென்றிருந்தார் என
இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழும் கிழக்கு மாகாண
முதலமைச்சரின் பங்களிப்புடனும் இதற்கான உரிய நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். sfm