நாட்டில் இடம்பெற்றுவரும் இனவாத, மதவாத நடவடிக்கைகள், தாக்குதல்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதிக்கும் பொதுபல சேனா அமைப்புக்கும் இடையே நடைபெற்றது. இதன்போது நாட்டில் பரவிவரும் மதப்பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.
இதேவளை அண்மைக்காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கும் பொது பல சேனா அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் நாட்டு மக்கள் கொண்ட நம்பிக்கையை சிதைப்பதற்காக சில விஷமிகள் முஸ்லிம் மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் தமது தரப்பு வாதத்தினை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
ஹலால் சான்றிதழ் தொடர்பிலான பொதுபல சேனா குற்றச்சாட்டுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தபோது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஹலால் சான்றிதழானது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் உணவுப் பொருட்களுக்கும் நாட்டில் முஸ்லிம் மக்களின் பாவனைக்காகவுமே வழங்கப்படுகிறது. அத்துடன் ஹாலால் சான்றிதழானது பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய உதவியாக அமைகின்றது எனத் தெரிவித்தார்.
