(Vi) காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்துக்குள் கடந்த சில தினங்களாக இனந்தெரியாத சிலரால் சிறுவர்கள் கடத்தப்படுவது குறித்து பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு காத்தான்குடி பள்ளிவாசல்கள்; நிறுவனங்களின் சம்மேளனமும் காத்தான்குடி பொலிசாரும் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
குறித்த எச்சரிக்கை அறிவிப்புக்கள் இன்றைய தினம் பள்ளிவாசல்கள் மூலம் அறிவிக்கப்பட்டதுடன் தனியாக சிறுவர்களை வெளியே அனுப்பும் போது மிக அவதானமாக இருக்குமாறும் பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் சிறுவர்களை மேலதிக வகுப்புக்களுக்கு அனுப்பும் போது கவனமாக அனுப்புமாறும் அது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துமாறும் காத்தான்குடி பள்ளிவாசல்கள்; நிறுவனங்களின் சம்மேளனமும் காத்தான்குடி பொலிசாரும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்குள் 3 சிறுவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. வெள்ளை நிற வான் ஒன்றில் வரும் இனந்தெரியாத நபர்கள் சிலர் இக்கடத்தலை மேற்கொண்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். கடந்த தினங்களில் இவ்வாறு கடத்தப்பட்டுள்ள 3 சிறுவர்களும் கடத்தப்பட்ட சில மணித்தியாலங்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த கடத்தலின் நோக்கம் தொடர்பில் இதுவரை கண்டு பிடிக்கப்படாத நிலையில் காத்தான்குடி பிரதேசத்தில் அச்ச நிலை ஒன்று நிலவுகின்றது.
இதனை அடுத்தே கடத்தல் சம்பவங்கள் தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
