(TM) நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற இனவாத செயற்பாடுகளுக்கு தாம் பொறுப்பல்ல என்று பொதுபலசேன அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பொதுபலசேன பிரதிநிதிகளுக்கும்; முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே பொதுபலசேன அமைப்பின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேன அமைப்பினர் மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, முஸ்லிம்கள் தொடர்பில் பொதுபலசேன அமைப்பு முன்வைத்துவரும் பல குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்பட்டது. எனினும் அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளனர் என முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
அத்துடன் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்படவில்லை. அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளை ஒருபோதும் நாங்கள் மேற்கொள்ளவில்லை; எனவும் அவர்கள்; தெரிவித்தனர் என மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இவ்வாறான கலந்துரையாடலை தொடர்சியாக மேற்கொள்ளவும் இதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வு காண முடியும் என்றும் இந்த சந்திப்பின் போது இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், ஹலீம், மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, கொழும்பு மேயர் முஸம்மில், பொதுபல சேன அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர், செயலாளர் அத்தே ஞான சார தேரர்இ அமைப்பாளர் டாக்டர் விதானகே, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் அஸ்கர் கான், மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் மற்றும் மௌலவி மாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
