இன்று காலை மாவனெல்லையில் பொதுபல சேனாவின் கூட்டம்

முஸ்லிம்களுக்கு எதிரான தமது பிராசரங்களின் தொடரில் பொதுபல சேனா அமைப்பு இன்று காலை மாவனெல்லை நகரில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

மாவனெல்லை பெலிகம்மானவிலுள்ள பொத்குல் விகாரையில் இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை இடம்பெற்ற இக் கூட்டத்தில் சுமார் 1500 பேரளவில் கலந்து கொண்டனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் இங்கு உரையாற்றினார்.

விகாரையின் உட்புறமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் ஆர்ப்பாட்டப் பேரணிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெளத்த மக்கள் ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்ட உற்பத்திகளை புறக்கணிக்க வேண்டும் எனவும் ஹலால் சான்றிதழ் முறைமை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட கலகொட அத்தேஞானசார தேரர் முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு நிற ஹிஜாப் ஆடைகளும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

வழமைபோன்று போயா தினத்துக்கு ஒன்றுகூடும் மக்களைப் பயன்படுத்தியே பொதுபல சேனா இன்றைய தினம் தனது பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இக் கூட்டத்திற்காக மக்கள் அங்கு ஒன்றுகூடவில்லை எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post