ஹலால் என்பது சுத்தமான உணவாகும்: பிரதமர் D.M. ஜயரட்ண


ஹலாலாலை பூதாகரமாக்கி அதிலிருந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஹலாலில் ஒன்றுமே இல்லை. ஹலாலான உணவு என்பது சுத்தமான உணவாகும் என்று பிரதமர் D.M ஜயரட்ண  தெரிவித்தார்.

கம்பளையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கம்பளை இல்லவதுறை ரஹ்மானிய்யா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் ஜே.எம். சஹீர் தலைiயில் நடைபெற்ற புதிய கட்டிடத் தொகுதியின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்ததன் பின்னர் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாட்டில் இன மற்றும் மதங்கள் மூலமாக இனங்களுக்கிடையில் நிலவும் புரிந்துணர்வை ஒழிக்க முற்படும் சக்திகளுக்கு ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார்.

நாட்டில் நடைபெற்ற கொடிய யுத்தத்தின் பின்பு இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு வருகின்றது. சமாதானம் கட்டியெழுப்பட்டுள்ளது. எனவே, இச்சந்தர்ப்பத்தில்  இனங்களுக்கு மத்தியில் பகைமைகளை வளர்க்க இடமளிக்க முடியாது.

இவ்வாறான முரண்பாடுகளை உருவாக்குவதற்கு சிறு சக்திகள் முற்படுகின்றன. நாம் முஸ்லிம் சமூகத்தை சந்தேக கண் கொண்டு நோக்கக்கூடாது.    

சர்வதேசத்தின் முன்னால் இலங்கையை தண்டிக்க சில நாடுகள் முனைப்புடன் செயற்படுகின்றன. பின்லாடன் எப்படி கொலை செய்யப்பட்டார். அவருக்கு என்ன? நடந்தது  அவரை கொலை செய்ய யார் வந்தார்கள்  என்று யாருக்கும் தெரியாது. 

ஆனால் இலங்கைக்கு எதிராக விரலை நீட்டப்படுகின்றது. நாம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளோம். அரசாங்கம் யுத்தத்தின் பின்பு வட-கிழக்கு உட்பட சகல பகுதிகளிலும் கோயில்கள் நிர்மானிக்கவும் பள்ளிவாசல்கள் கட்டவும் உதவியுள்ளது. இதற்காக  870 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் அப்துல் காதரும் கலந்து கொண்டார்.

நன்றி: தமிழ் மிரர் 

Post a Comment

Previous Post Next Post