உலகமே விரும்பும் ஹலால் பொதுபல சேனாவுக்கு மாத்திரம் பிரச்சினையாவது ஏன்?




(ஆரிப் சம்சுடீன்)

"தாய்லாந்து 64 மில்லியன் சனத்தொகையையும் அதில் 95% பௌத்தர்களைக் கொண்ட ஒரு நாடு. இந்த நாட்டிலே உள்ள பழமை வாய்ந்த பல்கலைக்கழகமான Chulalongkorn பல்கலைக்கழகத்திலே ஹலாலைக் கற்பதற்கு தனியான ஓர் பிரிவு உள்ளது. இந்த பிரிவினால் ஏராளமான பணிகள் முன்னெடுக்கப் படுவதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இது தவிர ASEAN என்கின்ற 10 உறுப்புரிமை நாடுகளைக் கொண்ட அமைப்பும் ஹலாலுக்கென்று தனியாகப் பிரமாணங்களை வரையறுத்து அதனை நடைமுறைப் படுத்தி வருகிறது. அது மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா என ஏராளமான அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஹலால் முறைமை சர்வ சாதாரணமாகக் காணப்படுகின்றது. இந்த விடயங்களை  கடந்த செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணசபை அமர்வில், தன்னுடைய உரையில்  உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தெளிவாகக் குறிப்பிட்டார்.  இது பற்றி அவரிடம் மேலும் வினவப் பட்ட போது ஓர் முஸ்லிமாக தான் உணர்கின்ற விடயங்களாக பின்வருவனவற்றை முன்வைத்திருந்தார்.

இப்படி உலகமே கடைப்பிடிக்கின்ற ஹலால் என்கின்ற  விடயத்தை இந்த பொது பல சேனா தூக்கிப் பிடிக்கின்றதென்றால் அது எம்மை பலவீனப் படுத்துவதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட ஆயுதமேயன்றி வேறில்லை. இந்த நேரத்தில் எமது பொறுமை, சகிப்புத்தன்மை, ஏனைய நற்குணங்கள் மூலம் அவர்களைக் கவர வேண்டும். இறைவனை நாம் பிரார்த்திக் கொண்டே இருக்க வேண்டும். எமக்குள் காணப்படும் பிரிவினைகளை விடுத்து ஒற்றுமை எனும் கயிற்றைப் பலமாகப் பற்ற வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிராக சமீப காலங்களில் பெருமளவு சர்ச்சைகளை சில குழுக்கள் ஏற்படுத்திய வண்ணம் உள்ளதை அனைவரும் அவதானித்து வருகின்றோம். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சர்ச்சைக்குட்படுத்தும் விடயம் இன்று நேற்று உண்டான ஒன்றல்ல. யாருக்காக இவ்வுலகைப் படைத்ததாக இறைவன் பறை சாற்றுகின்றானோ அந்த அண்ணலார் அடைந்த சோதனைகள் ஏராளம். இந்த நவீன ஜாஹிலிய்யத்திலே, இலங்கை நாட்டில், எமக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையின் பரிமாணம் சற்று வித்தியாசமானது. முதலில் முஸ்லிம்களாகிய நாம் எமது வகிபாகத்தை சரியான முறையில் பின்பற்றுகின்றோமா என்று பார்க்க வேண்டும்.

இஸ்லாம் சொன்ன பிரகாரம் எமது அன்றாட நடவடிக்கைகள் அமைகின்றனவா ?, ஐவேளை பேணுதலாகத் தொழுகின்றோமா ?, நபிகளாரின் வாழ்க்கை எம்மிடம் பிரதிபலிக்கின்றதா ?, இப்படியாக எம்மையும் எம் குடும்பத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதை சீர்படுத்திய கையோடு, சமூக சிந்தனைகளில் அக்கறை செலுத்த வேண்டிய சமூக விலங்குகளாக நாம் மாற வேண்டும் இன் ஷா அல்லாஹ். அப்படி நோக்குகின்ற பொழுது ஹலால் பிரச்சினையாக இருக்கட்டும், தூய இஸ்லாத்தை வேரருக்கின்ற எந்த செயற்பாடாக இருந்தாலும் அதை சமாதானமான முறையில் அணுக வேண்டியது எமது தலையாய கடமையாகும். பொது பல சேனாவின் நடவடிக்கைகளும் பேச்சுக்களும் மனதை உலுக்குவதாகவே அமைந்துள்ளது. பொது பல சேனாவின் செயலாளர் ஆக்ரோஷமாக உரையாற்றுகின்ற பொழுது எமக்கும் உணர்ச்சி கொப்பளிப்பதை யாரும் மறுக்க முடியாது. 

இது தவிர பேஸ்புக் போன்ற இணையப் பக்கங்களில் ஏராளமான முஸ்லிம் எதிர்ப்புப் பக்கங்களை உருவாக்கி அதில் போஸ்டர்களும் வெளியிடப்பட்டு வருகின்றது. இது போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முஸ்லிம்களுக்கு முடியாமலில்லை. எமது மார்க்கம் மாற்று மத சகோதரர்களை கண்ணியப்படுத்தி வழிப்படுத்தியதே தவிர அவர்களைச் சாடுவதற்கு அல்ல. யூத மத சகோதரனின் சடலம் கொண்டு செல்லப் படும் வழியில் எழுந்து மரியாதை செலுத்தியவர் எங்கள் முஹம்மது நபி (ஸல்). முஸ்லிம்கள் பொறுமையாகத் தொடர்ந்தும் இருப்பது  இஸ்லாத்திற்கும் ஏனைய மதங்களுக்கும் கொடுக்கும் பெரிய கண்ணியமாகும்.

புதன்கிழமை நெத் எப்.எம் வானொலியில் ஜம்மியதுல் உலமாவின் இரண்டு உலமாக்களின் பேட்டியை செவியுறும் சந்தர்ப்பம் கிடைத்தது.  அதில் பேட்டி கண்ட இரு சகோதர இன சகோதரர்களும் தேவையற்ற கேள்விகள் தொடுத்தமை சிறிது வெறுப்பை  உண்டாக்கியது. எமது உலமாக்கள் கண்ணியமான முறையில் பதிலளித்தனர், ஈரானில் புத்தர் சிலை விவகாரம் இடம்பெறவில்லை என்ற தெளிவு கிடைத்த பின்னரும் அது மீண்டும் வினவப் பட்டமை அவர்களின்  பக்கச்சார்பினை தெளிவாக்கியது. சவூதி அரேபியாவில் இப்படி, கடாபி அப்படி, அங்கே இப்படி, இங்கே அப்படி என அரபு நாடுகள் தொடர்பில் அவர்கள் அதிக கேள்விகளைத் தொடுத்தனர். சவூதியில் கட்டுப்பாடு அதிகம் என எடுகோள் எடுத்த அவர்கள் ஏன் கட்டார், குவைத், துபாய் போன்ற இடங்களில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை குறிப்பிடத் தவறினார்களோ தெரியவில்லை. அரபு நாடுகளோடு தொடர்பு படுத்தியமை, மறைமுகமாக, அவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களை அரபு நாடுகளின் பிரதிநிதிகளாக சித்தரித்தது போலவே தோன்றியது. முஸ்லிம்களின் ஆடை தொடர்பில் அவர்கள் தேர்தல் நடத்துவது எம்மை கேவலப் படுத்துவதேயன்றி வேறென்ன. 

ஆடை என்பது மனிதனின் அடிப்படை உரிமை. இதற்காக வானொலியில் தேர்தல் நடத்துவது வேடிக்கைக்குரியது. எம் தாய்த் திருநாட்டில், எத்தனையோ குற்றங்கள் அரங்கேறுகின்றன. தாய் பிள்ளைகளைக் கொல்வதும், தந்தை மகளைத் துஷ்பிரயோகம் செய்வதும் என இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து எப்படி ஆடை அணியலாம் என ஆராய்கின்ற வானொலிக்கு என்ன விருது வழங்கினால் சிறப்பாக இருக்கும் என சிந்திக்கத் தோன்றுகிறது.

தஹஜ்ஜத் வேளைகளில் அழுது பிரார்த்திக்க நாம் கடமைப் பட்டிருக்கின்றோம். பிர் அவ்னை வீழ்த்திய, லூத் நபியின் சமூகத்தை புரட்டியழித்த, யானைப் படையை சிறு கற்களைக் கொண்டு அழித்த இறைவனுக்கு இவர்களை அடக்குவது மிக மிக சிறிய காரியம். ஆனால், அந்த உதவியினைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சமூகமாக நாம் மாற வேண்டும். எமது பிரார்த்தனைகளை நாம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கடந்த மாகாண சபை அமர்வில் நாங்கள் இது தொடர்பில் ஓர் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றோம். எமது முஸ்லிம் அமைச்சர்களும் இது தொடர்பில் முயற்சி எடுத்து வருகின்றனர். ஜம்மியதுல் உலமாவின் பங்கும் அளப்பரியது. எல்லோருக்கும் இறைவன் துணை புரிவானாக."

Post a Comment

Previous Post Next Post