தற்பொழுது ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவையில் இன்று நடைபெற்ற இலங்கை மனித உரிமை நிலைவரங்கள் குறித்தான விவாதத்தில் தம்புள்ளை பள்ளிவாசல் தகர்ப்பு மற்றும் பொது பல சேனாவால் முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் ஜுப்லி கம்பைன் அமைப்பு, உலக கிறிஸ்தவ ஒன்றியத்துடன் இணைந்து மனித உரிமை பேரவையில் அறிக்கை ஒன்றினை சமர்பித்தது.
இவ்வறிக்கையில் இலங்கையில் கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னான காலப்பகுதியில் ஜனநாயகம் மீண்டும் பலவீனமடைந்துள்ளதாகவும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் பாரிய அச்ச நிலைமை ஒன்று இலங்கையில் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 2012 ஆம் ஆண்டு பெளத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழுவினரால் தம்புள்ளை பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதாகவும் இதன்மூலம் இலங்கையின் சிறுபான்மையினரின் மத உரிமைகள் தொடர்பில் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ தேவாலயங்கள் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்ததாகவும் தற்போது பொது பல சேனா என்ற அமைப்பு அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
