டிசெம்பர் 4ஆம் திகதி ஆசிரியர் - அதிபர் ஒன்றிணைந்து மாபெரும் பணிநிறுத்தப் போராட்டம்


எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி ஆசிரியர்  - அதிபர் ஒன்றிணைந்து மாபெரும் பணிநிறுத்தப் போராட்டமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் தெரிவித்தது. 

நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரையில் தீர்வுகள் எவையும் எட்டப்படாத நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அச்சங்கம் குறிப்பிட்டது. 

இது தொடர்பில், நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய நூலகத்தில் இடம்பெற்ற 11 தொழிற்சங்கங்கங்களின் சம்மேளனத்தின் போதே தீர்மானிக்கப்பட்டதாக சங்கம் கூறியது. 

கல்வி அமைச்சர் இதுவரையில் அதிபர் - ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடாத நிலையில், தொழிற்சங்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதையும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அதிபர் - ஆசிரியர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என்பதையும் கருத்திற்கொண்டே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
  
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், தேசிய கல்விச் சேவைச் சங்கம், ஆசிரிய சேவையாளர்களின் பொதுச் சங்கம், சுயாதீன கல்விச் சேவைச் சங்கம், ஐக்கிய தமிழ் ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம், தரம் 1 அதிபர் சங்கம், தரம்பெற்ற அதிபர் சேவைச் சங்கம் மற்றும் அகில இலங்கை அதிபர் சங்கம் உட்பட 11 சங்கங்கள் இந்த சம்மேளனத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post