எம்பிலிபிட்டியவில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தை தமது கட்சி ஏற்பாடு செய்யவில்லை என்றபோதிலும் அதில் தமது கட்சியின் உறுப்பினர்கள் வெவ்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொண்டிருக்கலாம் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
ஹலால் சான்றிதழ் பெற வேண்டுமென்று வர்த்தக நிறுவனங்களை முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலவந்தப்படுத்துகின்ற போக்குக்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு ஹலால் உணவு உண்பதற்கு உரிமை இருப்பது போல ஹலால் இல்லாத உணவை உண்பதற்கான உரிமை மற்ற மதத்தவர்களுக்கு உண்டு என்றும் அமைச்சர் உதய கம்மன்பில வாதிட்டார்.
அதேவேளை, நாட்டில் பௌத்த விகாரைகளுக்கு அருகில் 'உரிய அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் சட்டவிரோதமானவை' என்றும் அவற்றை அகற்ற வேண்டுமென்றே தாம் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
