அனுராதபுரம் மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலை 3 மாத காலக்கெடுவில் அகற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவகாசம் வழங்கியுள்ளனர்.அனுராதபுரம் லேன் பள்ளிவாசலை உடனடியாக தகர்க்குமாறு இன்று பெளத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இன்று பகல் வேளையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பள்ளிவாசல் அமைந்துள்ள மல்வத்து ஓயா லேன் மூடப்பட்டதோடு பொலிசாரும் அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளிவாசலை தகர்ப்பதற்கு மும்முரம் காட்டியதோடு அப்பிரதேசத்தில் பயணித்த முஸ்லிம் பாதசாரிகளை வன்மையான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டித் தீர்த்ததாகவும் தெரியவருகிறது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த அனுராதபுரம் கிழக்கு பிரதேச செயலாளர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த பள்ளிவாசலை 3 மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என காலக்கெடு விதித்ததுடன் இக்காலக் கெடுவில் பள்ளிவாசல் அகற்றப்படாவிடத்து தாம் மீண்டும் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நன்றி: விடிவெள்ளி
