தற்கால சமூகப் பிரச்சினை மற்றும் குறிப்பாக சிங்கள முஸ்லிம்களுக்கிடையிலான பிரச்சினை தொடர்பில் சர்வமத பிரநிதிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு சிங்கிங் பிஸ் விடுதியில் 23வது இரானுவ படையனியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண இரானுவ கட்டளைத்தளபதி லால் பெரேராவின் ஆலோசனைக்கமைவாக நடைபெற்றுள்ளது.
புத்த சாசன மத விவகாரங்களுக்கான அமைச்சின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான கிழக்கு மாகாண பிராந்தியப் பொறுப்பாளர் ஜூனைத் (நளீமி)யின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் மூவின மக்களின் சமயப் பிரச்சினைகளை ஆராய்தல், சமயங்கள் தொடர்பான தப்பபிப்பிராயங்களை களைதல், இனமுறுகல்களை ஏற்படுத்தும் காரணிகளை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், குற்றச்செயல்களை தடுப்பதில் மதத்தலைவர்களின் பங்கு, இனவிரிசலை ஏற்படுத்தும் ஊடகங்களை அவதானித்தல், குறுஞ்செய்திச் சேவையினால்(ளுஆளு) ஏற்படும் விபரீதங்கள் போன்ற பல்வேறு தலைப்புக்களினூடாக கலந்துரையாடி அவைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துடையாடலில் 231வது இரானுவ படையணித் தளபதி சுதத் திலகரத்ண மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்மியதுல் உலமாக்களுக்கான தலைவர் மௌலவி அலியார்(பலாஹி) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் அல்-ஹாஜ் மர்சூக் அஹமட் லெப்பை, செயலாளர் அப்துல் காதர்(பலாஹி), மட்டக்களப்பு மங்பளாராம ஸ்ரீ ரஜமஹா விகாரை விகாராதிபதி அம்பினிபிட்டிய சுமங்கள தேரர், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி பலாஹி தமிழ் முஸ்லிம் சிங்கள கிறிஸ்தவ மதப் பெரியார்கள், இரானுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அண்மைக்காலமாக பேரினவாத சிங்களக்குழுக்கள் முஸ்லிம்களை அடக்குமுறைக்குள் ஆழ்த்தும் பல்வேறு இனத்துவேச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையிலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






