தூக்கிலிடப் பட்ட மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப், ஜனாதிபதிக்கு எழுதிய கருணை மனு வெளியிடப் பட்டுள்ளது.
கடந்த் 2008 ஆம் ஆண்டு, மும்பை நகரம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டது. இந்தச் சம்பவத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 9 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரால், கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப்பை மட்டும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அஜ்மல் கசாபுக்கு சமீபத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டது. தூக்குத் தண்டனைக்கு முன் அஜ்மல் கசாப் ஜனாதிபதிக்கு எழுதிய கருணை மனு தற்போது வெளிடப் பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப் பட்டிருப்பதாவது:
"ஐயா, உச்ச நீதிமன்றத்தால் எனக்கு அதிகபட்ச தண்டனை (சாகும் வரை தூக்கிலிடுதல்) விதிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து என்னை மரண தண்டனையிலிருந்தும், தூக்கு மேடையில் இருந்தும் தாங்கள் விடுவிக்க வேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்." என எழுதப்பட்டுள்ளது.
லக்னோ பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஊர்வசி சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இக்கடிதத்தைப் பெற்றுள்ளார்.
கசாபின் கருணை மனு, ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட பின்பே தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
உலகச் செய்திகள்
