ஹலால் சான்றிதழால் கிடைக்கப்பெறும் பணம் சாதாரண மக்களின் நன்மைக்காக பயன்படுத்தப்படுவதில்லை-அசாத் சாலி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடமுள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்துக்கு மாற்றப்பட வேண்டும் என கொழும்பு மாநகர  சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,அண்மைக்காலமாக பொது பல சேனா   அமைப்பு   ஹலால் சான்றிதழை பிரச்சினைக்குட்படுத்தி மதவாதப் பூசல்களை தூண்டுவதற்கு முயற்சிக்கிறது. ஹலால் சான்றிதழ் சகல பொருட்களிலும் காணப்பட வேண்டும் என எந்தவொரு முஸ்லிம் அமைப்பும் நிர்ப்பந்திக்கவில்லை. உற்பத்தியாளர்கள் தமது தொழில் நோக்கம் கருதி இச்சான்றிதழை பெற்றுக்கொள்கின்றனர். எனவே இதனை பூதாகரப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். 

ஹலால் சான்றிதழை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பணத்தைப் பெற்று வழங்கினாலும் அந்தப் பணம் சாதாரண மக்களின் நன்மைக்காக  பயன்படுத்தப்படுவதில்லை. ஆகவே  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடமுள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் முஸ்லிம் சமய கலாசாரத்திணைக்களத்துக்கு மாற்றப்பட வேண்டும். 
 
முஸ்லிம்களின் பிரச்சினை மற்றும் முஸ்லிம் மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஆராயுமுகமாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஜம்இய்யத்துல் உலமா கலந்து கொள்வதாக அறிவித்துவிட்டு மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 
இதற்கான காரணம் என்ன என்பதை ஜம்இய்யத்துல் உலமா வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் எதிர்க் கட்சித் தலைவரிடம் மன்னிப்பும்  கேட்க வேண்டும்.
 
இதேவேளை, ஜம்இய்யத்துல் உலமா செய்தது முற்றிலும் தவறாகும்.  இதற்காக ஜம் இய்யத்துல் உலமா சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன் எனவும்  தெரிவித்தார்.

நன்றி:விடிவெள்ளி 

Post a Comment

Previous Post Next Post