1951 ஆம் ஆண்டுக்குப்பின் கொழும்பில் மிகக் குளிரான காலநிலை நிலவுகிறது. இன்று காலை கொழும்பு வெப்பநிலை 18.2 பாகை செல்சியஸாக பதிவாகியது. கடந்த 60 ஆண்டுக்குப்பின் கொழும்பு நகரில் பதிவாகிய மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும். இதற்கு அடுத்த மிகக் குறைந்த வெப்பநிலையாக கடந்த ஜனவரி மாதம் 18.8 பாகை செல்சியஸ் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் ‘குளிர்கால பருவக்காற்று’ என அழைக்கப்படும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக பல பகுதிகளில் வெப்பநிலை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலும் அநுராதபுரத்திலும் வெப்பநிலை 18 பாகையாகவும் யாழ்ப்பாணத்தில் 19 பாகையாகவும் நுவரெலியாவில் 7.7 பாகையாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி.பி.சமரசிங்க தெரிவித்துள்ளார்.
டிசெம்பர் மாதத்தில் குளிரான காலநிலை காணப்படுவது வழமையாகும். வங்காள விரிகுடாவில் வெப்ப விளைவுத்தாக்கம் காணப்பட்டதால் கடந்த வருடங்களில் குளிரான காலநிலை உணரப்படவில்லையென அவர் கூறினார்.
வங்காள விரிகுடாவில் தற்போது வெப்ப விளைவுத்தாக்கம் இல்லையெனவும் டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குளிரான காலநிலை நீடிக்குமெனவும் பணிப்பாளர் நாயகம் ஜி.பி.சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
